கோலாலம்பூரில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்.. வெள்ளி தேரில் முருகன் வீதி உலா
கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூரில் பங்குனி உத்திரத்தையொட்டி திருத்தேரில் முருகப் பெருமான் வீதி உலா நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.
உலகம் முழுவதும் பரவி வசித்து வரும் தமிழர்கள் கொண்டாடும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி உத்திரமும் ஒன்று.
உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது போல இது மலேசியாவிலும் வருடா வருடம் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்
முருகனை மயில்ல பார்த்திருப்பீங்க.. புல்லட்டுல பார்த்திருக்கீங்களா.. புதுவையில் கலகல!
கோலாலம்பூர் செந்தூல் முருகன்
கோலாலம்பூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி திருக்கோவில், இதற்கு செந்தூல் முருகன் கோவில் என்றும் பெயர் உண்டு. இது நகரத்தார் சமூகத்தினர் கட்டிய கோவிலாகும். இங்கு பங்குனி உத்திர விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
வெள்ளி ரத ஊர்வலம்
இந்தக் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி வெள்ளித் தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டும் அந்த வைபவம் கோலாகலமாக நடந்தேறியது. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வெள்ளி ரதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
காவடி சுமந்து வந்து
திருத்தேரோட்டம் மற்றும் பங்குனி உத்திரத்தையொட்டி தமிழர்களும் பலரும் திருக்காவடி சுமந்து வந்து சாமி கும்பிட்டனர். ஆயிரக்கணக்கானோர் திரண்டு அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
பக்தர்கள் நேர்த்திக் கடன்
பெரும்பாலான பக்தர்கள் பல்வேறு நேர்த்திக் கடனை நேர்ந்து கொண்டு விதம் விதமான காவடி சுமந்து கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கூட்டம் காவடிகளுடன் அலை மோதியது.
தேரோட்டம் பார்க்க
செட்டி தெருவில் இருந்து ஜலான் ஈபோ முருகன் கோவிலுக்கு திருத்தேரோட்டமும் நடைபெற்றதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதுதொடர்பான புகைப்படத் தொகுப்பை நமது வாசகர் துரைராஜன் உமாசங்கர் அனுப்பி வைத்துள்ளார். நீங்களும் பார்த்து முருகன் அருள் பெறுங்கள்.