தொடர்ந்து அழுகை.. பிறந்து 5 நாளே ஆன குழந்தையின் வாயில் டேப் ஒட்டிய கொடுமைக்கார நர்ஸ்
செபு: தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் பிறந்து சில தினங்களே ஆன குழந்தையின் வாயில் டேப் ஒட்டியதாக நர்ஸ் ஒருவர் மீது மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார் பிலிப்பைன்ஸ் நாட்டு தந்தை ஒருவர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள செபு நகரில் உள்ள மருத்துவமனையின் ரேயன் நாவல் என்பவரது மனைவி ஜாஸ்மினுக்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது. மகப்பேறு பிரிவில் உள்ள அக்குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், அதன் வாயில் டேப் ஒன்றை ஒட்டியுள்ளார் குழந்தையை பராமரிக்கும் பணியில் இருந்த நர்ஸ் ஒருவர்.
அதிகமாக அழுகிறது...
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நாவலின் மனைவி ஜாஸ்மின், ‘ஏன் குழந்தையின் வாயில் டேப் ஒட்டப் பட்டுள்ளது? என நர்சிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் குழந்தை அதிகம் அழுவதாகத் தெரிவித்துள்ளார்.
டேப்பை அகற்ற மறுப்பு..
பின்னர் குழந்தையின் வாயில் உள்ள டேப்பை அகற்றுமாறு ஜாஸ்மின் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு நர்ஸ் மறுத்து விடவே, ஜாஸ்மினே டேப்பை அகற்றியுள்ளார்.
புகார்...
டேப் குழந்தையின் வாய் பகுதியில் நன்றாக ஒட்டி இருந்ததாக, இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்கள் நாவலும், ஜாஸ்மினும். நிர்வாகமும் இது குறித்து விசாரணை நடத்துவதாக அவர்களுக்கு உறுதி அளித்துள்ளதாம்.
பேஸ்புக்...
இதற்கிடையே தன் குழந்தையின் மேல் உதட்டில் இருந்து கன்னம் வரை ஒரு டேப் ஒட்டப்பட்ட படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் நாவல். பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் வாயில் இவ்வாறு டேப் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அழுகை தான் குழந்தையின் முதல் மொழி...
புதிதாக பிறந்த குழந்தைகள் வார்த்தைகள் அல்லது செய்கைகளின் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவிக்கப் பழகுவதற்கு முன் அழுகையின் மூலம் தான், தனது பசி, வலி மற்றும் இயற்கை உபாதைகளை மற்றவர்களுக்கு உணர்த்தும் என்பதை அந்த நர்ஸ் மறந்து விட்டார் போலும்.