பாரீஸில் பயங்கரவாதிகள் தாக்குதல்... இந்திய தூதரக ஹெல்ப்லைன் எண்கள் அறிவிப்பு
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்தடுத்து நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, அமெரிக்கா தூதரக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள பட்டாக்லன் இசை கச்சேரி அரங்கம், பிரான்ஸ் - ஜெர்மனி இடையே நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடைபெற்ற மைதானம் அங்குள்ள உணவு விடுதி உள்ளிட்ட 7 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 160 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகாளாக உள்ளனர்.
இந்தக் கொடூர தாக்குதல் பாரீஸ் நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நகரில் உள்ள மக்கள் பீதியில் உறைந்துபோயுள்ளனர்.இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் தாக்குதலில் இந்தியர்களின் நிலை குறித்து அறியும் பொருட்டு இந்திய தூதரகத்தின் உதவி மைய எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், பிரான்சில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக நம்புவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய தூதரகத்தை 0140507070 என்ற உதவி மைய எண்ணில் தொடர்பு கொண்டு நிலவரங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அமெரிக்க அரசு அறிவித்துள்ள உதவி மைய எண்: 1 888 407 4747 அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பாரீஸ் நகரில் உள்ள சார்லே ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் பலியான சம்பவத்தையடுத்து, ஐ.எஸ் தீவிரவாதிகளின் இலக்காக பாரிஸ் மாறியது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை அடுத்து பலமுறை தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டன- இந்த நிலையில் நேற்று மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டு நடத்தியுள்ளனர் தீவிரவாதிகள்.