அகதிகளோடு அகதியாக சிரியாவில் இருந்து கிரீஸ் வழியாக பாரீஸ் வந்த தீவிரவாதி
பாரீஸ்: பாரீஸ் நகரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் சிரியாவில் இருந்து அகதியாக கிரீஸ் வழியாக ஐரோப்பா வந்துள்ளார்.
பாரீஸ் நகரின் 6 இடங்களில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடந்த படாகிளான் தியேட்டர் அருகே கிடந்த தீவிரவாதியின் உடலுக்கு அருகில் சிரியா பாஸ்போர்ட் இருந்தது.
இந்நிலையில் அந்த நபரை அடையாளம் காணுமாறு பிரான்ஸ் அதிகாரிகள் கிரீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். தீவிரவாதி சிரியாவில் இருந்து அகதியாக கிரீஸில் உள்ள லெரோஸ் தீவுக்கு கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி வந்தது தெரிய வந்துள்ளது.
அவர் அகதிகளோடு அகதியாக கிரீஸ் வந்து அங்கிருந்து பாரீஸுக்கு வந்துள்ளார். அவருடன் எத்தனை தீவிரவாதிகள் அகதிகள் என்ற பெயரில் கிரீஸ் வந்தனர் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.
மேலும் தீவிரவாதிகள் பயன்படுத்திய 2 கார்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது தவிர தாக்குதல்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.