பாரீஸ் தாக்குதல்: பெல்ஜியத்தைச் சேர்ந்த அப்துஸலாமை தேடும் போலீஸ்; சிக்கியும் நழுவவிட்ட போலீஸ்
பாரீஸ்: பாரீஸ் தாக்குதல் தொடர்பாக பெல்ஜியத்தை சேர்ந்த சாலா அப்துஸலாம் என்பவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 129 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் தாங்கள் வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து இறந்தனர் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் ப்ருசெல்ஸில் பிறந்த சாலா அப்துஸலாம்(26) என்பவர் தேடப்படும் முக்கிய குற்றவாளி என்று பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது புகைப்படத்தையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். சாலா அப்துஸலாம் பெல்ஜியத்தில் ஃபோக்ஸ்வேகன் போலோ காரை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் பாரீஸ் வந்துள்ளார். படாகிளான் தியேட்டர் அருகே அந்த கார் நின்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் பெல்ஜியம் எல்லையில் அப்துஸலாம் மற்றும் இருவர் வேறு ஒரு காரில் சென்றுள்ளனர். போலீசார் அவர்களின் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டு அவர்களை அனுப்பிவிட்டனர்.
அப்துஸலாம் ஆபத்தானவர் என்றும், அவரை யாரும் அணுக வேண்டாம் என்றும் போலீசார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். அவருக்கும், அவரது சகோதரர்களுக்கும் பாரீஸ் தாக்குதலில் தொடர்பு உள்ளது.
அப்துஸலாமின் சகோதரர் பிராஹிம் அப்துஸலாம்(31) படாகிளான் அருகே தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். மற்றும் ஒரு சகோதரரான முகமது பாரீஸில் இருந்து பெல்ஜியம் திரும்பியபோது ப்ருசெல்ஸில் கைது செய்யப்பட்டார். பெல்ஜியத்தில் போலீசார் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துருக்கி
பாரீஸில் தாக்குதல் நடத்திய அதே நேரத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலும் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். அவர்களின் சதித்திட்டத்தை போலீசார் முறியடித்துள்ளனர்.
இஸ்தான்புல் நகரில் நடத்தப்பட்ட தேடல் வேட்டையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஜிஹாதி ஜானின் நெருங்கிய கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.