பாரீஸ் தாக்குதலில் தேடப்படும் குற்றவாளி அப்துஸலாம் பெல்ஜியத்தில் கைது?
ப்ருசெல்ஸ்: பாரீஸ் தாக்குதல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாலா அப்துஸலாம் பெல்ஜியம் தலைநகர் ப்ருசெல்ஸில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 129 பேர் பலியாகினர், 532 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக பெல்ஜியத்தைச் சேர்ந்த சாலா அப்துஸலாம்(26) அறிவிக்கப்பட்டார்.
தாக்குதல் நடந்த மறுநாள் அவர் சென்ற காரை போலீசார் பெல்ஜியம் எல்லையில் நிறுத்தி சோதனை செய்துவிட்டு அவரை விட்டுவிட்டனர். இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் ப்ருசெல்ஸின் புறநகர் பகுதியான மொலென்பீக்கில் போலீசார், கமாண்டோக்கள் சில வீடுகளை சுற்றி வளைத்து சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த சோதனையின்போது அப்துஸலாம் கைது செய்யப்பட்டுள்ளதாக தனியார் ரேடியோவான ஆர்டிஎல் தெரிவித்துள்ளது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை என பெல்ஜியத்தில் உள்ள பிரெஞ்ச் சமூகத்தினர் நடத்தும் ஆர்டிபிஎப் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மொலென்பீக் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறிய முஸ்லீம்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொலென்பீக்கில் பாரீஸ் தாக்குதல்கள் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தபோதிலும் அப்துஸலாம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கவில்லை.