தீவிரவாதத்தை எதிர்த்து இன்று மாபெரும் பேரணி: உஷார் நிலையில் பாரீஸ்
பாரீஸ்: தீவிரவாத செயல்களை கண்டித்து இன்று பாரீஸில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் ஒற்றுமை பேரணி நடக்க உள்ளது. இதனால் பாரீஸ் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இந்த வாரம் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 17 பேர் பலியாகினர். பாரீஸில் உள்ள கோஷர் சூப்பர் மார்க்கெட்டில் 5 பேரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த தீவிரவாதி அமேதி கவ்லிபாலியின் காதலி ஹயாத் போமெடின்(26) பிரான்ஸில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மலகாப் பகுதியில் பெண் போலீஸ்காரரை கொன்ற சம்பவத்தில் ஹயாத்திற்கும் தொடர்பு உள்ளது என்று கருதப்படுகிறது.
மிகவும் ஆபத்தானவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ள ஹயாத் ஏற்கனவே பிரான்ஸில் இருந்து சிரியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீவிரவாத தாக்குதல்களை கண்டித்து பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் சனிக்கிழமை பேரணிகள் நடைபெற்றன. இந்த பேரணிகளில் 7 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று பாரீஸில் ஒற்றுமை பேரணி நடக்க உள்ளது. இந்த பேரணியில் நேற்றைய பேரணியை விட அதிகமானோர் கலந்து கொள்ள உள்ளனர். பேரணியில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையொட்டி பாரீஸ் நகரில் 2 ஆயிரம் போலீசார் மற்றும் 1, 350 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பேரணியில் தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் குடும்பத்தார் கலந்து கொண்டு பிறரை வழிநடத்த உள்ளனர்.
3 தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை அடுத்து பிரான்ஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.