வடக்கு பிரான்ஸில் காரில் ஆயுதங்களுடன் சென்ற 2 பேர் சார்லி ஹெப்டோ தாக்குதல்காரர்களா?
பாரீஸ்: பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ அலுவலகத்தை தாக்கிய சகோதரர்கள் முகஜாடையுடன் ஒத்துப் போகும் இருவரை இன்று காலை வடக்கு பிரான்ஸில் மக்கள் பார்த்தாக உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை அலுவலகத்திற்குள் 2 பேர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பத்திரிக்கை ஆசிரியர் ஸ்டெபனீ சார்போனியர் உள்பட 12 பேர் பலியாகினர். இந்த வழக்கில் 18 வயது ஹமீது மவ்ரத் போலீசில் இன்று சரண் அடைந்துள்ளார். பிரான்ஸைச் சேர்ந்த சகோதரர்களான சயித் குவேச்சி மற்றும் செரிப் குவேச்சி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அவர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அந்த சகோதரர்களின் முகஜாடையுடன் ஒத்துப் போகும் இருவர் இன்று காலை வடக்கு பிரான்ஸில் ரெனால்ட் காரில் சென்றதை மக்கள் பார்த்ததாக உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த இருவரும் காரில் ஆயுதங்களுடன் பாரீஸ் நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. நேற்று சார்லி ஹெப்டோ அலுவலகம் தாக்கப்பட்டதையடுத்து இன்று பாரீஸில் 2 போலீசார் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் பெண் போலீஸ்காரர் பலியானார்.
இது தவிர பாரீஸில் உள்ள லியான் ஹோட்டலில் இன்று குண்டுவெடித்துள்ளது. இந்த சம்பவங்களால் பிரான்ஸ் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.