நாடாளுமன்றத் தேர்தல்… மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் அணி அமோக வெற்றி
மாலே: மாலத்தீவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் அணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து, முகமது நஷீத் மீண்டும் அதிபராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாலத்தீவில் 19-வது நாடாளுமன்றத்தைத் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் , வாக்குப்பதிவு, அமைதியான முறையில் நடந்தது. மாலத்தீவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ள திருவனந்தபுரத்திலும் ஒரு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 87 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான இந்தத் தேர்தலில், முன்னாள் அதிபர் முகமது நஷீத், நாடாளுமன்ற சபாநாயகர் காசிம் இப்ராகிம் உட்பட 386 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்தநிலையில், முழுமையான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தமுள்ள 87 தொகுதிகளில், முன்னாள் அதிபர் முகமது நஷீத் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி 65 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது, மூன்றில், இரண்டு பங்கு பெரும்பான்மை விட அதிகமாகும்.
ஜமூரி கட்சி, மாலத்தீவு முற்போக்கு கட்சி ஆகியவை தலா ஐந்து தொகுதிகளிலும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த அமோக வெற்றி குறித்து பேசிய முகமது நஷீத், மாலத்தீவில் ஜனநாயகம் திரும்ப செய்வேன் என்றார்.
முகமது நஷீத் மீது பயங்கரவாத வழக்கு தொடரப்பட்டதால் வெளி நாட்டில் தஞ்சம் அடைந்தார். பின்னர், அந்த வழக்கை மாலத்தீவு உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் ரத்து செய்த பிறகு தான் அவர் மாலத்தீவுக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது