தம்மாத்தூண்டு தேனீயால் 4 மணி நேரம் விமானம் லேட்... "ஆங்கிரி பேர்டாக" மாறிய 156 பயணிகள்!
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஒரு குட்டித் தேனீயால் 156 பயணிகளுடன் புறப்படத் தயாராய் இருந்த விமானம், 4 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலிருந்து நேற்று காலை 156 பயணிகளுடன், கருடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், தலைநகர் ஜகர்தாவுக்கு செல்ல தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதை விமானி கண்டுபிடித்தார்.
அதனைத் தொடர்ந்து விமானத்தை தொழில்நுட்ப அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது விமானத்தின் முக்கிய பகுதியான பிடாட் குழாயில் (காற்றின் வேகத்தை கணிக்க உதவும் பகுதி) குட்டித்தேனீ ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக் குட்டித் தேனீயால் தான் விமானத்தைக் கட்டுப்படுத்தும் பல முக்கிய சாதனங்கள் வேலை செய்யாததது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, குட்டித் தேனீயை அப்புறப்படுத்திவிட்டு, 4 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "நாங்கள் பயணிகளின் பாதுகாப்பிற்கே முதன்மையான முக்கியத்துவம் அளிப்போம். அதனால்தான் இந்த தாமதம்" என்று தெரிவித்துள்ளார்.
எனினும் தேனீயால் காலதாமதம் ஏற்பட்டதால் விமானப் பயணிகள் சற்று கோபம் அடைந்தனர்.