பதன்கோட் தாக்குதல்: 'அடையாளம் தெரியாத நபர்கள்' மீது பாக். எப்.ஐ.ஆர்! மவுலானா எஸ்கேப்
இஸ்லாமாபாத்: பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானதளத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதல் பிரச்சினையில், பாகிஸ்தான் காவல்துறை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதில், இந்தியா சுட்டிக்காட்டிய ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மவுலானா மசூத் அசார் பெயரை சேர்க்கவில்லை. அடையாளம் தெரியாத நபர்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமான தளத்திற்குள், புகுந்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர், பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். 3 நாட்கள் தொடர்ந்த தேடுதல் வேட்டைக்கு பிறகு, 6 பாதுகாப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஊடுருவிய 5 தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளதற்கும், அதன் தலைவர் மவுலானா மசூத் அசார் இத்தாக்குதலின் மூளை என்றும், ஆதாரங்களை திரட்டி பாகிஸ்தானிடம் அளித்தது இந்தியா.
இருப்பினும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் பாக். அமைதி காத்தது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று அளித்த பேட்டியில், பாகிஸ்தான் தூங்குவதை போல நடிப்பதாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பதன்கோட் தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தானிலுள்ள குஜ்ரன்வாலா தீவிரவாத எதிர்ப்பு காவல் நிலையத்தில், 302,324,109 & 7ATA ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எப்.ஐ.ஆரில் யாருடைய பெயருமே குற்றவாளி என குறிப்பிடப்படவில்லை. தாக்குதலில் அடையாளம் தெரியாத நபர்கள் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், மவுலானா ஆசாத்தை தப்பவைக்க பாக். முயலுவது அம்பலமாகியுள்ளது.