ஜெர்மனியில் பயங்கரம்: மருத்துவமனையில் டாக்டரை சுட்டுக் கொன்ற நோயாளி
பெர்லின்: ஜெர்மனியில் உள்ள பெஞ்சமின் பிரான்க்லின் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் டாக்டரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார்.
ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஸ்டெக்லிட்ஸ் மாவட்டத்தில் உள்ளது பெஞ்சமின் பிரான்க்லின் பல்கலைக்கழக மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் இன்று காலை 11 மணிக்கு நோயாளி ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டாக்டர் ஒருவரை நோக்கி சுட்டார்.
இதில் படுகாயம் அடைந்த டாக்டர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 2 மணிநேரம் கழித்து அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதற்கிடையே டாக்டரை சுட்ட அந்த நோயாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கும், தீவிரவாதத்திற்கும் தொடர்பு இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மருத்துவமனையில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.