தவறுதலாக சிறுமியின் மூளைக்குள் செலுத்தப்பட்ட பசை: ரூ.33 கோடி இழப்பீடு தரும் மருத்துவமனை
கடந்த 2010ம் ஆண்டு மூளை நரம்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாக கண்டறியப்பட்ட மய்ஷா நஜீப் என்ற 10 வயது சிறுமி சிகிச்சைக்காக லண்டன் ஆர்மண்ட் தெரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மூளை நரம்பு ரத்தக் கசிவைச் சரி செய்ய ஆபரேஷன் செய்யப்பட்டது. அதில் மூளை நரம்பில் உள்ள ரத்தக்கசிவை நிறுத்துவதற்காக பசை போன்ற மருந்து ஒன்று செலுத்தப்பட்டது. ஆனால், அது தவறுதலாக அவரது இடது பக்க மூளைக்குள் சென்று விட்டது.
இதனால், அறுவைச் சிகிச்சை முடிந்த சில தினங்களில் அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியுள்ளன. அதனைத் தொடர்ந்து சிறுமி சார்பில் மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு போடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியம் பிர்ட்லெஸ், சிறுமிக்கு 33 கோடியே 53 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். மேலும், சிறுமிக்கு 18 வயது ஆகும் வரை ஆண்டுதோறும் 4 கோடியே 59 லட்சத்து 45 ஆயிரத்து நானூற்று நாற்பத்திரண்டு ரூபாய் வழங்கவும், 18 வயது முடிவடைந்து 19 வயது தொடங்கும் போது இந்த தொகையை 5 கோடியே 7 லட்சத்து 64 ஆயிரத்து முப்பத்தொன்பது ரூபாயாக உயர்த்தி வழங்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.