தலிபான்களுடன் பேச்சு- ஆப்கானை இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு தளமாக்கக் கூடாது: ஜெய்சங்கர்
தோஹா: கத்தாரின் தோஹா நகரில் ஆப்கானிஸ்தான் - தலிபான்கள் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் தொடக்க நிகழ்வில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பிடியில் குறிப்பிட்ட பகுதிகள் இருக்கின்றன. ஆப்கான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே யுத்தம் நீடித்தும் வருகிறது.
ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா படைகளும் உதவின. தற்போது ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. இதற்காக இருதரப்பும் கைதிகளை விடுதலை செய்திருந்தன.
காங். நியமனம்- சோனியாவுக்கு எதிராக கடிதம் எழுதிய 23 பேரில் தப்பியவர்கள், தலைகுப்புற வீழ்ந்தவர்கள்
தோஹாவில் அமைதி பேச்சு
இதனிடையே கத்தாரின் தோஹா நகரில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் இன்று அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆப்கான் புலனாய்வு பிரிவு முன்னாள் தலைவர் மஸ்தும்பங், தலிபான்களின் தலைமை நீதிபதி மெளலவி அப்துல் ஹக்கீம் ஆகியோர் தலைமையில் இருதரப்பு குழுக்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளன. ஆப்கான் மற்றும் தலிபான் குழுவினர் திங்கள்கிழமை முதல் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு
இன்றைய தொடக்க நாளில் ஆப்கானிஸ்தானின் தேசிய மறுசீரமைப்பு உயர்நிலைக் குழு தலைவர் அப்துல்லா அப்துல்லா, தலிபான் துணைத் தலைவர் முல்லா அப்துல் கானி பர்தார், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர் சிறப்புரையாற்றினர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சிறப்புரையாற்றினார்.
ஆப்கானுக்கான பேச்சுவார்த்தைகள்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தமது உரையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆப்கானிஸ்தான் தலைமையில் ஆப்கானிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவுக்கு எதிரான தளமாக்க கூடாது
சிறுபான்மையினர், பெண்களின் நலன்களை உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். ஆப்கானிஸ்தானின் அத்தனை பகுதிகளிலும் இந்தியாவின் 400க்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானை ஒருபோதும் இந்தியாவின் நலன்களுக்கு எதிரான தளமாக பயன்படுத்த அனுமதிக் கூடாது என்பது எங்களது எதிர்பார்ப்பு என்றார்.