எலிவேட்டரில் மலர்ந்த காதல்.. 3வது திருமணத்திற்குத் தயாராகும் பீலே.. 42 வயது காதலியுடன்!
ரியோ டிஜெனீரோ: பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் 3வது முறையாக திருமணம் செய்யவுள்ளார். அவர் திருமணம் செய்யப் போவது 42 வயதான மார்சியா சிபெல் அயோக்கி ஆவார்.
அயோக்கியை கடந்த 6 வருடமாக சீரியஸாக காதலித்து வருகிறார் பீலே. இவர்களது திருமணத்தை பிரேசில் நாட்டவர் ஆர்வமாக எதிர்நோக்கியுள்ளனர்.
இருவரும் கடந்த 6 வருடமாக டீப்பாக காதலித்து வந்தனர். இந்தக் காதல் இப்போது திருமணத்தில் முடியப் போகிறது.
2012 முதல்
2012ம் ஆண்டு முதல் பீலேவுடனேயே கிட்டத்தட்ட இருக்கிறார் அயோக்கி. பீலே போகும் இடமெல்லாம் இவரும் கூடவே போகிறார். பொது நிகழ்ச்சிகளிலும் கூட இருவரம் சேர்ந்து பங்கேற்கின்றனர்.
சிகிச்சை பெற்றபோதும்
பீலேவுக்கு பலமுறை உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் கூட அயோக்கி கூடவே இருந்து அவரை கவனித்துக் கொண்டார். இந்த நிலையில்தான் அயோக்கியைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார் பீலே.
3வது திருமணம்
பீலேவுக்கு இது 3வது திருமணமாகும். எனக்கான அன்பை, காதலை நிரந்தரமாக கண்டு கொண்டு விட்டேன் என்று அயோக்கி குறித்துக் கூறியுள்ளார் பீலே.
ஆயிரம் கோல் போட்ட அபூர்வ ஜாம்பவான்
பீலே கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் மேதை ஆவார். மொத்தம் 1363 போட்டிகளில் ஆடி 1281 கோல்களை அடித்த அசகாய சூரர். 3 முறை பிரேசில் அணிக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்த சாதனையாளரும் ஆவார்.