அமெரிக்க ராணுவ தளபதியை சுட்டுக் கொன்ற ஆப்கானிஸ்தான் வீரர்!
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 2001 பென்டகன் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் மிகப்பெரிய அதிகாரி தாக்குதலில் கொல்லப்பட்டது இதுதான் முதன்முறையாகும்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, ஜெர்மனி உட்பட பல நாடுகளின் கூட்டுப்படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருக்கான உடையில் வந்த ஒருவர் அமெரிக்க ராணுவ தளபதியை சுட்டு கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரி சுட்டுக்கொலை
இந்த தாக்குதலில் ஜெர்மன் நாட்டு தளபதி ஒருவர் உள்பட 15 படையினரும் அந்த வீரரின் தாக்குதலால் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.அமெரிக்காவின் இரு-நட்சத்திரங்களை அணிந்துள்ள அந்த அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை. இருப்பினும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் ஹரோல்ட் ஜே.கிரீனே என்று தெரிவிக்கிறது. நியூயார்க்கை சேர்ந்த அவர், மெட்டீரியல் அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றவராம்.
பெரிய தாக்குதல்
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம்தேதி அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தையும், ராணுவ தலைமையகமான பென்டகனையும் தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி தாக்கினர். பென்டகனில் பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் டிமோதி ஜோசப் கொல்லப்பட்டவர்களில் ஒருவராகும். இதன்பிறகு அமெரிக்க உயர் ராணுவ அதிகாரி ஒருவர் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டது இதுதான் முதல்முறை.
ஆப்கானிஸ்தான் ராணுவ வீரரா?
பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பே இத்தாக்குதல் தகவலை உறுதி செய்தார். மேலும் அவர் கூறுகையில் "ஆப்கானிஸ்தான் ராணுவத்தை சேர்ந்தவரில் ஒருவரே கூட இந்த தாக்குதலை நடத்தியிருக்க கூடும். இருப்பினும் முழு தகவலை இப்போது கூற முடியாது.
நம்பிக்கை இன்னும் உள்ளது
இந்த சம்பவத்தால் பன்னாட்டு படைகளுக்கு, ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாக நான் கருதவில்லை. ஏதோ ஒரு சம்பவத்தை வைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தை குறை கூறிவிட முடியாது. ஆப்கானிஸ்தானில் நடந்த தேர்தலை அமைதியாக நடத்தி முடித்ததில் அந்த நாட்டு ராணுவத்துக்கு முக்கிய பங்கு உள்ளது.
அதிகாரிக்கு கிடைத்த நற்சான்றிதழ்
அச்சுறுத்தல்களை ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு நாட்டில் முற்றிலும் அகற்றிவிட முடியும் என்று நான் கருதவில்லை. அதே நேரம், அச்சுறுத்தல்களை குறைக்க நாங்கள் நடவடிக்கையை தொடருவோம். மிகமோசமான ஒரு நாள் இது, மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. மிகச்சிறந்த பணியாற்றிய அதிகாரிக்கு கிடைத்த நற்சான்றிதழாக நாங்கள் இதை எடுத்துக்கொள்கிறோம்" இவ்வாறு ஜான் கிர்பே தெரிவித்தார்.