இந்தோனேசியாவில் மீண்டும் பதற்றம்... சுனாமி பீதியால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி பீதி ஏற்பட்டதால் 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இந்தோனேசியாவில் கடந்த 22-ந்தேதி எரிமலை வெடிப்பினை தொடர்ந்து, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுனாமி ராட்சத அலைகள் எழுந்தன. இதில் சிக்கி சுமார் 500 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அனக் கிரகட்டாவ் எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கி உள்ளது. இதனால் மீண்டும் சுனாமி ஏற்படக்கூடும் என்ற பீதி ஏற்பட்டு உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், ஆபத்தான மண்டலங்களாக கருதப்படும் பன்டன், லம்பங் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தபட்டுள்ளனர்.
மேலும் ஜாவா, சுமத்ரா தீவுகளின் கடற்கரையோரம் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நிகழ்ந்த சுனாமி பேரழிவில் இருந்து மீள்வதற்குள், மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.