பதட்டத்தில் கத்தார்.. உணவுப் பொருட்களை ஸ்டாக் வைக்கும் மக்கள்.. சூப்பர் மார்க்கெட்களில் கூட்டம்!
கத்தார் நாடு மீது விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவுப் பொருட்களை வாங்கி சேமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தோஹா: கத்தார் மீது சவுதி உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள தடையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள உணவுப்பொருட்களை வாங்கி மக்கள் வீடுகளில் தேக்கி வருகின்றனர்.
ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக குற்றம்சாட்டி சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் கத்தார் நாட்டுடனான நல்லுறவை துண்டித்துக் கொள்வதாக தெரிவத்தன. மேலும் ராஜாங்க ரீதியிலான உறவையும் துண்டித்துக் கொள்வதோடு, கடல், வான் மற்றும் தரை வழிப் போக்குவரத்துக்கும் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 5ம் தேதி வெளியான திடீர் அறிவிப்பு காரணமாக அந்த நாட்டு மக்களும், வெளிநாடுகளில் இருந்து பணி மற்றும் கல்வி நிமித்தமாக கத்தார் சென்றுள்ள மக்களும் பதற்றம் அடைந்துள்ளனர். இதனிடையே கல்ப் நாடுகள் கத்தாருடனான அனைத்து இணைப்புச் சாலைகளையும் மூடியுள்ளன. மேலும் கல்ப் நாடுகளில் உள்ள கத்தார் நாட்டு மக்கள் 14 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உணவுத் தட்டுப்பாடா?
சவுதி அரேபியா எல்லையை ஒட்டியுள்ள கத்தார் நாட்டின் 80 சதவீத உணவுத் தேவையை அண்டை நாடுகளான சவுதி மற்றும கல்ஃப் அரபு நாடுகளே மூலதனமாக உள்ளன. இந்நிலையில் எல்லை மூடப்படுவதால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
முன் எச்சரிக்கை
கத்தார் நாடு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்து நிலைமை எப்போது சரியாகும் என்று தெரியவில்லை. இந்நிலையில் உணவுக்கு கஷ்டப்படும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள பொருட்களை மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
மாற்று ஏற்பாடு
பதற்றம் காரணமாக மக்கள் அதிகஅளவில் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு படையெடுத்ததால் கடைகளில் உள்ள ராக்குகள் அனைத்தும் காலியாகக் காணப்படுகின்றன. எனினும் கத்தார் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் ஈரான் நாட்டிலிருந்து உணவுப்பொருட்களை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குவைத் சமரச முயற்சி
இதனிடையே கத்தார் நாடு மீது விதிக்கப்பட்ட தடையால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த நாடுகளிடையே சமரச பேச்சு நடத்த குவைத் முயற்சித்து வருவதாக தெரிகிறது. தற்போதைய நிலையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கத்தார் நாட்டுடன் பஹ்ரைன், எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட வங்கிகள் பணப்பரிமைற்றம் செய்யத் தயங்குவது குறிப்பிடத்தக்கது.