தனியாக இருப்பவர்களைவிட தனிமையில் இருப்பவர்கள் விரைவில் மரணம்.. ஷாக் தரும் ஆய்வு!
தனிமையான உணர்பவர்களுக்கு மனஅழுத்தத்தால் முன்கூட்டியே மரணம் ஏற்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது.
Recommended Video
லண்டன்: தனிமையில் வாழ்பவர்களைவிட, சுற்றிலும் மனிதர்கள் இருந்தாலும் தனிமையில் இருப்பதைப் போன்று உணர்பவர்களே அதிகம் இதய நோய் உள்ளிட்ட நோய்த்தாக்குதலுக்கு ஆளாவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது.
பொதுவாக யாரும் இல்லாமல் தனிமையில் வாடுபவர்கள், மிகவும் மனவேதனையில் இருப்பார்கள். எனவே, அவர்களுக்குத் தான் அதிக அளவில் மன அழுத்தம், உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுவதுண்டு.
ஆனால், அவர்களைவிட தனிமை உணர்வில் இருப்பவர்கள் தான் அதிகளவில் பாதிப்பிற்கு ஆளாவதாகவும், மற்றவர்களைவிட விரைவில் அவர்கள் மரணத்தைத் தழுவுவதாகவும் கூறுகிறது புதிய ஆய்வு. இது தொடர்பாக டென்மார்க்கைச் சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் அன்னி விண்கார்ட் கிறிஸ்டன்கன் ஆய்வு நடத்தி முடிவைச் சமர்ப்பித்துள்ளார்.
கேள்வி - பதில்:
இந்த ஆய்வில் 13,463 இருதய நோயாளிகளிடம் இருந்து ஆய்வுக் கேள்விகளுக்கு பதில் பெறப்பட்டது. அதில், ‘உங்களுக்கு எப்படி இருதய நோய் ஏற்பட்டது. உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது ஏன்? புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால் இருதயநோய் உண்டானதா?' என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
மன அழுத்தம்:
இந்தக் கேள்விகளுக்கு அந்த நோயாளிகள் அளித்த பதிலில், தன் மீது யாரும் அக்கறை இல்லாமல் இருந்ததாகவும், அதனால் தனிமையாக உணர்ந்ததாகவும், அதன் பாதிப்பினாலேயே இருதய நோய் ஏற்பட்டதாகவும் பெரும்பாலானோர் பதில் அளித்துள்ளனர்.
முன்கூட்டியே மரணம்:
சுற்றிலும் ஆட்கள் இருந்தபோதும், தனிமையாக உணர்ந்ததால் இருமடங்கு மனஅழுத்தம் மற்றும் அச்ச உணர்வு ஏற்பட்டு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை தொடரும் பட்சத்தில் அத்தகைய இருதய நோயாளிகள், எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே மரணம் அடைவதாக அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
தனிமை விரும்பிகள்:
இந்த ஆய்வின் மூலம் மக்கள் கூட்டத்திலும் தனிமை விரும்பிகளாக வாழ்வோர் தான், பெருமளவில் உடல்பாதிப்பிற்கு ஆளாவது தெரிய வந்துள்ளது. இது அவர்களது உயிருக்கே வினையாவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.