'இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக சமூக நீதி சக்திகள் ஒன்றிணைவோம்' -கலிஃபோர்னியாவிலிருந்து ஒரு அழைப்பு!
சான் ஓசே(யு.எஸ்): தந்தை பெரியாரின் 139-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கலிபோர்னியா மாநிலத்தில் சான் ஓசே பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக் கழகத்தின் டாக்டர் மார்டின் லூதர் கிங் நூலக அரங்கில் கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழாவில், 'பெரியாரின் சுயமரியாதை இயக்கம், மனித நேயம்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
சாக்ரமெண்டோ பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் அம்ரிக் சிங், இந்திய சிறுபான்மையினர் கழகத்தின் இயக்குனரான, அமெரிக்கர் பீட்டர் பிரட்ரிச், அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின் ச.கார்த்திகேயன், பி.ஆர்.அம்பேத்கர் சீக்கிய நிறுவனத்தின் பஜன் சிங், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் கோ.கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர்.
மக்களிடையே உள்ள பிறவி பேதத்தை ஒழித்திட வேண்டும் என்ற பெரியாரின் கொள்கைகள் பற்றி உரையாற்றினார்கள். பெண்கள் மேம்பாட்டிற்காகவும், தந்தை பெரியார் வழங்கியுள்ள அளப்பறிய கருத்துகள், போராட்டங்கள் குறித்தும் அனைவரும் எடுத்துரைத்தனர்.
தற்போதைய சூழலில், இந்துத்துவ சக்திகள் ஆட்சி அதிகாரம் ஏற்று மக்களிடையே பிளவையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகிறது. அதை எதிர்த்து, அனைத்து சமூக நீதிச் சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்கள்
அமெரிக்கத் தமிழர்கள் தவிர அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து டாக்டர் நன்னன் மகள் வேண்மாள், மருமகன் செம்மல் ஆகியோரும் வந்திருந்தனர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் வீடியோ வாழ்த்து, விழா தொடக்கத்தில் ஒளிபரப்பப் பட்டது. பெரியார் பன்னாட்டமைப்பின் கலிபோர்னியா கிளையின் சார்பில் வினோதினி காந்தராஜ் அனைவரையும் வரவேற்றார்.பாம்செப் அமைப்பின் அசோக் பூலா விழாவை தொகுத்து வழங்கினார்.
வந்திருந்த அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. இனிப்புகளை பெரியார் பன்னாட்டமைப்பின் கலிபோர்னியா கிளை சார்பாக தமிழ்ச் செல்வன் கருணாநிதியும், அறிவழகன் கருணாநிதியும் வழங்கினர்.
விழாவை பெரியார் பன்னாட்டமைப்பு, கலிபோர்னியா கிளை, பி.ஆர்.அம்பேத்கர் சீக்கியர் அமைப்பு, இந்திய சிறுபான்மையினர் கழகம், அம்பேத்கர் கிங் படிப்பு வட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தினார்கள்.
- இர தினகர்