நிரந்தர ஜாமின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆதரவாளர்கள் புடை சூழ வேட்டுகள் அதிர சிறை திரும்பிய நவாஸ்
இஸ்லாமாபாத்: நிரந்தர ஜாமின் கேட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.
நவாஸ் மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட ஒரு சில வழக்குகளில் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.
அல் அஜீசியா இரும்பாலை ஊழல் தொடர்பான வழக்கில் நவாசிற்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்களால் நவாஸ் சிறையில் அவதிப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனையில் சேர்த்து உயர் சிகிச்சை அளிக்க சிறை மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனை காரணம் காட்டி அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப் ஜாமின் மனு தாக்கல் செய்தார், இதனையடுத்து சிகிச்சை பெறுவதற்காக அவருக்கு கடந்த மார்ச் 26-ம் தேதியன்று 6 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது,
பாகிஸ்தானில் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம், ஆனால், வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்ட ஜாமின் அது, இந்நிலையில் நீதிமன்றம் கொடுத்த ஜாமின் அவகாசம் நேற்றுடன் முடிந்தது, இந்நிலையில் தனக்கு நிரந்தர ஜாமின் வழங்க வேண்டும் என்று நவாஸ் நீதிமன்றத்தில் கோரினார்.
களமிறங்கிய ஸ்டார் பேச்சாளர்கள்.. போட்டி போட்டு மோதும் பாஜக - காங்கிரஸ்.. காரணம் இருக்கு மக்களே!
ஆனால் அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனையடுத்து வேறுவழியின்றி மீண்டும் நேற்று சிறைக்கு திரும்பினார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியினர் அவரை வீட்டில் இருந்து பேரணியாக சிறைக்கு அழைத்து சென்றனர்
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற பேரணி திருவிழா போல காட்சியளித்தது. அப்போது பட்டாசு மற்றும் வானவேடிக்கை நிகழ்வுகளும் நடத்தப்பட்டது. ஜெயிலுக்கு போவதை நவாஸின் ஆதரவாளர்கள் திருவிழா போல கொண்டாடியது வினோதமாக இருந்தது