இவரை மாதிரி தெரியாமல் ஓட்டுப் போட்டுடாதீங்க: நாட்டை விட்டே வெளியேற்றி விடுவார் ட்ரம்ப்!
க்ரீன்கார்டு மட்டுமே வைத்திருந்த பெரு நாட்டைச் சார்ந்த மார்கரிட்டா டெல் பிலர் ஃபிட்ஸ்பாட்ரிக் அமெரிக்காவில் ஓட்டு போட்ட காரணத்திற்காக நாட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்.
அமெரிக்காவில் பள்ளிக் கல்வி மாவட்டம், நகராட்சி, மாநில செனட்டர், உறுப்பினர், கவர்னர், அமெரிக்க செனட்டர், உறுப்பினர், அதிபர் என பலப்பல தேர்தல்கள் உண்டு.
ஒவ்வொரு தேர்தலிலும் பொதுமக்களால் வாக்களித்து முடிவு செய்யப்படும் உள்ளூர் மசோதாக்களும் இடம் பெறும்.
தேர்தலுக்கு முன்னதாக வாக்குரிமைக்காக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு அனுப்புவது பிரமாண பத்திரத்திற்கு சமமானதாகும். ஏதாவது தவறான தகவல் அளித்து இருந்தால் குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குரியதாகும்.
3 பெண் குழந்தைகளுக்குத் தாய்
தென் அமெரிக்காவின் பெருவைச் சார்ந்த மார்கரிட்டா 2001ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்தார். படித்து நர்ஸாக வேலைக்குச் சேர்ந்தார். க்ரீன்கார்டும் பெற்று விட்டார்.
பெரு நாட்டில் இருக்கும் போது பிறந்த மூன்று குழந்தைகளையும் அமெரிக்கா அழைத்து வந்து அவர்களுக்கும் க்ரீன்கார்டு கிடைத்து விட்டது.
2005ம் ஆண்டு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக சென்ற போது அங்குள்ள அதிகாரி வாக்குரிமைக்கு விண்ணப்பிக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்.
இவரோ, தனக்கு வாக்களிக்க உரிமை உண்டா என்று கேட்டுள்ளார். அதிகாரியோ அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது என்று கூறியுள்ளார்.
விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்யும் போது அமெரிக்க குடிமகனா என்ற கேள்விக்கு ஆம் என்று குறிப்பிட்டு விட்டார். வாக்குரிமை அட்டையும் வந்து விட்டது. இரண்டு தேர்தல்களில் ஓட்டும் போட்டு விட்டார்.
2007ம் ஆண்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்த போது, அதிகாரிகளிடம் தான் ஏற்கனவே வாக்களித்துள்ளேன் என்று, அது குற்றம் என்று அறியாமலேயே கூறிவிட்டார்.
பின்னர் வாக்குரிமை அட்டையை ரத்து செய்தும் அனுப்பி விட்டார். அதற்குள் குடியுரிமை அதிகாரிகள் அவரை நாடு கடத்த உத்தரவு பிறப்பித்து விட்டனர்.
தெரியாமல் செய்த பிழையா?
அன்று முதல் இன்று வரையிலும் நீதிமன்றங்களில், தான் ஓட்டுநர் உரிம அலுவலக அதிகாரியால் குழப்பப்பட்டு விட்டேன். தெரிந்து தவறு செய்யவில்லை என்று போராடி வருகிறார். இன்னும் ஒரு அப்பீலுக்கு வாய்ப்பு இருக்கிறது. முடிவு என்னவாகும் என்று தெரியவில்லை.
2016ம் ஆண்டு தேர்தலில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் வாக்களித்துள்ளார்கள் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது.
அமெரிக்காவில் நீட்டிய படிவத்தில், சரிவர படித்துப் பார்க்காமல் கையெழுத்திடுவது எவ்வளவு பெரிய சிக்கலுக்கு வழிவகுக்கும் என்பதற்கு இது மிகப்பெரிய பாடமாகும்.
சில மாநிலங்களில் க்ரீன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு குறிப்பிட்ட உள்ளூர் மற்றும் மாநில தேர்தல்களில் வாக்களிக்க உரிமை உண்டு. எந்தெந்த தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
அதையெல்லாம் சரிவரld தெரிந்து வாக்குரிமைக்கு விண்ணப்பித்து வாக்களிக்க வேண்டியது முக்கியமாகும்.
குறிப்பாக அமெரிக்க குடிமக்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட தேர்தலில் வாக்களித்தால் அது கிரிமினல் குற்றமாகும். அமெரிக்காவை விட்டு வெளியே அனுப்பப்படுவது நிச்சயம்.
இது மட்டுமல்ல, க்ரீன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு சில கடமைகளும், செய்யக்கூடாதவைகளும் உண்டு.
கிடைச்ச க்ரீன்கார்டை பத்திரமா வச்சுக்க கொஞ்சம் கவனமாக இருங்கள் மக்களே!
-இர தினகர்