முஷாரப் வெளிநாடு செல்ல அனுமதியில்லை: பாகிஸ்தான் அரசு திட்டவட்ட அறிவிப்பு
கடந்த 2007-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, ராவல்பிண்டி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பதவி இழந்தார் பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப்.
அதன் பின்னர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற முஷாரப், சில ஆண்டுகள் அங்கு தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு நாடு திரும்பிய முஷாரப் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் பாதுகாப்பு கருதி, அவர் வீட்டு காவலில் அடைக்கப்பட்டார். அவரது வீட்டிலேயே சிறைத்துறை அதிகாரிகள் அவருக்கு காவல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், வீட்டுக்காவலில் இருந்த வந்த முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதாகவும், இனி, அவர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்னர் அவரது வக்கீல் அதிகாரப் பூர்வமாக தெரிவித்தார்.
ஆனால் இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தவுடன் கடந்த 2007-ம் ஆண்டு இஸ்லாமாபாத் ரெட் மசூதியில் நடந்த ராணுவ நடவடிக்கையில் அப்துல்ரஷீத் ஹாஷி என்ற மதகுரு கொலை செய்யப்பட்ட வழக்கில் முஷாரப் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
மீண்டும் முஷாரப் துபாய் சென்று விடுவார் என உலவிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரிநசீர் அலிகான் பதிலளித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, ‘வெளிநாடு செல்பவர்கள் கட்டுப்பாடு பட்டியலில் முன்னாள் அதிபர் முஷாரப் பெயர் உள்ளது. அவர் மீது கோர்ட்டில் பல வழக்குகள் உள்ளன. எனவே அவர் பாகிஸ்தானில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓட முடியாது. சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்தால் மட்டுமே அவர் வெளிநாடு செல்ல முடியும்' எனத் தெரிவித்துள்ளார்.