பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில் முஷாரப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த பாக். நீதிமன்றம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேனாசீர் புட்டோ படுகொலை வழக்கில், அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளி என பிரகடனம் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருமுறை பிரதமராக இருந்த பெனாசீர் பூட்டோ, தேர்தல் பிரசாரம் ஒன்றில் பங்கேற்றபோது, 2007, டிசம்பர் 27ம் தேதி ராவல்பிண்டியில், வைத்து வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு மூலம் கொல்லப்பட்டார்.
இந்த படுகொலை வழக்கை தீவிரவாத ஒழிப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. நீதிமன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ராவல்பிண்டியின் காவல்துறை தலைவராக இருந்த சவுத் ஆசிஸ், மற்றொரு காவல்துறை அதிகாரி குர்ரம் ஷெஷாத் ஆகியோர் குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தலா 17 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பிறர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளி என்று அறிவித்துள்ள நீதிமன்றம், அவரது சொத்துக்களை முடக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.