ஒசாமா பதுங்கி இருந்த இடம் முஷாரபுக்கு தெரியும்: பத்திரிக்கையாளர் திடுக் தகவல்
வாஷிங்டன்: அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் பதுங்கி இருந்த இடம் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரபுக்கு தெரியும் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
கார்லோட்டா கால் என்னும் பெண் பத்திரிக்கையாளர் பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து தி நியூயார்க் டைம்ஸ் செய்திகள் அனுப்பி வந்தார். அவர் தற்போது தி ராங் எனிமி: அமெரிக்கா இன் ஆப்கானிஸ்தான் 2001-2004 என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து நடந்தால் முஷாரப் காலத்தில் நடந்த பல மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரும். ஒரு நாள் தற்போது ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ஜெனரல் தலாத் மசூதும், முஷாரபும் சேர்ந்து வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது முஷாரப் ஒசாமா பின் லேடன் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் கூறியதை கேட்டு மசூத் அதிர்ச்சி அடைந்தார்.
முஷாரப் பேசியதை வைத்து பார்த்தால் அவருக்கு ஒசாமா பின் லேடன் எங்கு பதுங்கி இருந்தார் என்பது நன்றாகத் தெரியும் என்பது மசூதுக்கு புரிந்தது. முஷாரபுக்கு பின் லேடனின் இருப்பிடம் தெரிந்திருக்கும் என்று எனக்கும் தோன்றுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.