95 வயது தாயாரைக் காண துபாய் செல்ல வேண்டும்: முஷரப்பின் அப்பீல் மனுவை ஏற்றது கோர்ட்
கராச்சி: வயதான தாயாரைக் காண வெளிநாடு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்ற முஷரப்பின் கோரிக்கை மனுவை விசாரணைக்கு ஏற்ற பாகிஸ்தான் நீதிமன்றம் அதுகுறித்தான விளக்கமளிக்க சம்பந்தப் பட்ட வழக்கறிஞர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியாளராக இருந்த முஷரப், பெனாசிர் கொலை வழக்கில் இருந்து தப்பித்து வெளிநாடுகளில் வசித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் திரும்பிய அவர் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைகள் மீண்டும் தொடங்கியது. சமீபத்தில் நான்கு முக்கிய வழக்குகளில் இருந்து ஜாமீன் பெற்ற அவருக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்து வீட்டுக்காவலில் இருந்து மட்டும் விடுதலை அளித்தது நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து துபாயில் இருக்கும் தனது 95 வயது தாயாரின் உடல்நிலைக் குறித்து நேரில் சென்று பார்த்து வர வேண்டும் என முஷரப் சார்பில் அவரது வழக்கறிஞர் ஏ.கியூ. ஹேல்பொடோ, சிந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பாக 18-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு துணை தலைமை வழக்கறிஞர், சிந்து மாகாண தலைமை வழக்கறிஞர் மற்றும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.