எலி தலைக்கு ரூ. 25... பெஷாவர் மக்களை ‘பூனை’ப் படையாக்கிய பாக். அரசு!
பெஷாவர்: எலித் தொல்லையைக் கட்டுப்படுத்தும் விதமாக பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் எலியைக் கொன்றால் பரிசு வழங்கப்படும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் எலிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் எலி கடித்து குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
இது தொடர்பாக பெஷாவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பெஷாவர் நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவை அமைப்பு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி, எலிகளைக் கொல்பவர்களுக்கு பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொல்லப்படும் ஒவ்வொரு எலியின் தலைக்கும் தலா ரூ. 25 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெஷாவர் மக்கள், ‘பூனை'ப் படைகளாக மாறி, எலிகளை வேட்டையாடி வருகின்றனர்.