பெஷாவர் பள்ளிக் குழந்தைகள் மீதான தாக்குதல் எதிரொலி – ஹாக்கி வீரர்களின் வரவேற்பு ரத்து
லாகூர்: பாகிஸ்தான் பெஷாவர் நகரில் நடைபெற்ற தாலிபான்களின் கொலை வெறித்தாக்குதலை அடுத்து ஹாக்கி வீரர்களுக்கான வரவேற்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தை பெற்றது. 16 ஆவது வருடத்திற்கு பின் இறுதிப்போட்டியில் நுழைந்த அந்த அணி, ஜெர்மனியிடம் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றது.
அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வென்றிருந்தது. இதனால், நாடு திரும்பிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு லாகூரில் அந்த அணிக்கு பிரமாண்ட வரவேற்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், பெஷாவரில் இன்று ராணுவ பள்ளியில் புகுந்த 6 தீவிரவாதிகள் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 160 பேரை சுட்டு வீழ்த்தினார். இதனால், ஹாக்கி அணியின் வரவேற்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு கூறும்போது, ‘‘பெஷாவர் நகரில் நடைபெற்ற துயர சம்பவத்தால் வரவேற்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் வரும் வீரர்கள் லாகூர் வரை வாகனங்களில் அழைத்து வரப்படுவார்கள். வரவேற்பு விழா வேறு ஒரு நாளில் நடத்தப்படும்" என்று கூறியுள்ளது.