தேச துரோக வழக்கு.. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பிற்கு தூக்கு தண்டனை!
இஸ்லாமாபாத்: தேச துரோகம் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பிற்கு தூக்கு தண்டனை விதித்தது பெஷாவர் சிறப்பு நீதிமன்றம்.
75 வயதான பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானில் 1999-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை அந்நாட்டு அதிபர் பதவியில் இருந்தார். அப்போது 2007-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால் ஏராளமான சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர் மீது 2013-இல் தேச துரோக வழக்கு பாய்ந்தது. மேலும் அவர் மீது பெனசீர் பூட்டோ கொலை வழக்கு, பலுசிஸ்தான் தேசியவாத தலைவர் அக்பர் புக்தி கொலை வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு முஷாரப் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியும், அவரை கைது செய்ய பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு உத்தரவு பிறப்பித்தும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
காலை உடைத்து.. ஆணுறுப்பில் தீ வைத்து.. சாதாரண செல்போனுக்காக.. கேரளாவில் பதற வைக்கும் ஷாக் சம்பவம்!
துபாயில் சிகிச்சை
இந்த நிலையில் தேச துரோக வழக்கை பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதனிடையே கடந்த 2016-ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக முஷாரப் துபாய் சென்றார். ஒரு வித அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2018-இல் நடந்த விசாரணையில் முஷாரப்பை கைது செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
தீர்ப்பு
நவம்பர் 19-ஆம் தேதியுடன் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள், வாதங்கள் நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தேச துரோக வழக்கில் முஷாரப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்வார் என தெரிகிறது. பாகிஸ்தான் நாட்டின் 10 ஆவது அதிபராக இருந்த அவர் 1999-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை சர்வாதிகாரி போல் செயல்பட்டார். நவாப் ஷெரீப்பின் ஆட்சியை சதி செய்து கவிழ்த்தவர் என்றும் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானியர்கள்
முஷாரப் பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தலைவராக இருந்த போது கார்கில் போரை திட்டமிட்டார். இது பாகிஸ்தானை இந்தியாவுடன் போரிட செய்தது. 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியை முஷாரப் கவிழ்த்த போது பொருளாதார ரீதியாக பேரழிவை தரும் நிர்வாகத்திற்கு முடிவு கட்டி விட்டதாக பல பாகிஸ்தானியர்கள் கொண்டாடினர்.
தீவிரவாதிகள்
அவர் செப்டம்பர் 2001-ஆம் ஆண்டு தாக்குதலுக்கு பிறகு அவர் அமெரிக்காவுடன் இணைந்தார். பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கு பாடுபட்டதற்காகவும் தாலிபான்கள் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளை சமாளிக்க முயன்றதாகவும் அவர் சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றார்.
அவசர கால நிலை
மார்ச் 2007-ஆம் ஆண்டு தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் வரை அவர் எந்த ஒரு கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்ததில்லை. ஆனால் பதவி நீக்கத்துக்கு பிறகு நாடு முழுவதும் போராட்டங்கள், பல மாதங்களாக நீடித்த கொந்தளிப்புகளால் அவசர கால நிலையை அமல்படுத்த நேரிட்டது. தேச துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் பாகிஸ்தானிய ராணுவ தளபதி முஷாரப் ஆவார்.