பெஷாவர் தாக்குதல்: ராணுவ பள்ளி முதல்வரை குறிவைத்து கொன்ற மனித வெடிகுண்டு
பெஷாவர்: ராணுவ தளபதியை திருமணம் செய்து கொண்டதற்காகவே பெஷாவரில் பள்ளி முதல்வரை குறிவைத்து கொலை செய்துள்ளனர் தீவிரவாதிகள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளிக்குள் புகுந்த தாலிபான் இயக்க தீவிரவாதிகள் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
132 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 141 பேர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அப்பள்ளியின் முதல்வரை கொல்லும் நோக்கில் தீவிரவாதிகள் மனிதவெடிகுண்டான தீவிரவாதி ஒருவனை அனுப்பியது தற்போது தெரியவந்துள்ளது.
ஓய்வு பெற்ற ராணுவ படைத்தளபதியை திருமணம் செய்து கொண்டதால் அப்பள்ளியின் முதல்வரை குறிவைத்து மனிதவெடிகுண்டாக மாறி தன்னையும் மாய்த்துக்கொண்டான் அந்த தீவிரவாதி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வரின் அலுவலகத்துக்குள் நுழைந்த அந்த தீவிரவாதி மனிதவெடிகுண்டாக மாறி வெடித்ததால் அந்த அறையே முற்றிலும் சேதமடைந்துள்ளது. குவாசி கொல்லப்பட்டதை ராணுவ செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்பள்ளி முதல்வரான தாஹிரா குவாசி, முன்னாள் ராணுவ படைத்தளபதியான குவாசி சபருல்லாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். ராணுவ தளபதியை திருமணம் செய்ததற்காகவே அவர் தீவிரவாதிகளால் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம்.