பெஷாவர் தாக்குதலுக்கு பதிலடி: தலிபான்கள் மீது பாக். ராணுவம் தாக்குதல்
பெஷாவர்: பள்ளிக் குழந்தைகளை படுகொலை செய்த தலிபான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வர்ஜிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் உக்கிரமான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
பெஷாவரில் 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேரை தெஹ்ரிக் இ தலிபான் என்ற பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள் நேற்று படுகொலை செய்தனர். 7 தலிபான் தற்கொலைப் படை தீவிரவாதிகள் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டனர்.
தலிபான் தீவிரவாதிகளுடன் 8 மணிநேர சண்டை நடத்தி அவர்களை ஒழித்தது பாகிஸ்தான் ராணுவம். இதனைத் தொடர்ந்து பதிலடியாக பாகிஸ்தான் விமானப் படை கைபர் பகுதியில் உக்கிரமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அந்தப் பகுதிதான் தெஹ்ரிக் இ தலிபான்கள் புகலிடமாக இருந்து வருகிறது.
அதாவது அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட உடனேயே ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்திய பாணியில் பாகிஸ்தானும் இறங்கியுள்ளது.
இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் கான் கூறுகையில், பாகிஸ்தானின் இதயத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் தீவிரவாதிகள். இதனால் கைபர் பகுதியில் தீவிரவாதிகளின் நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தி வருகிறோம் என்று கூறியிருந்தார்
இதனிடையே ராணுவ தளபதி ரஹீல் கான் இன்று ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார். காபூரில் ஆப்கானிஸ்தான் தலைவர்களுடன் தலிபான்களை ஒடுக்குவதற்கான வியூகம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.