புத்தாண்டில் சோகம்... பிலிப்பைன்சில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலி
மணிலா: பிலிப்பைன்சில் பெய்த கனமழையை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 68 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில், இயற்கை பேரிடர்கள் ஆண்டுக்கு 10 க்கும் குறையில்லாமல் வந்து தாக்குகிறது.
இந்தநிலையில், கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்து பெய்து வந்த மழை தீவிரமடைந்து, பேய் மழையாக மாறியது. இந்த நிலையில், அந்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில், 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேரழிவு மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்த மக்களுக்கு மழைவெள்ளம் பேரிடியாக அமைந்துள்ளது.
போலீசார் மற்றும் அரசு அமைப்புகளை சேர்ந்த மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சில நாட்களுக்கு மழை தொடரும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.