தேசிய கீதத்தை 'உற்சாகத்துடன்' பாடவேண்டும் : பிலிப்பின்ஸின் புது சட்டம்
தேசிய கீதம் பாடும்போது, உற்சாகத்துடன் பாட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் ஒரு மசோதாவிற்கு பிலிப்பின்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
''தேசிய கீதத்தை ஆர்வத்துடன் கட்டாயமாக பாட வேண்டும்'' என இந்த மசோதா கூறுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் 'கட்டாயம்' என்ற வார்த்தை இல்லை.
தற்போது உள்ள மெட்டுக்கு, அதிகாரப்பூர்வ இசையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
விதிகளை மீறுபவர்களுக்குத் தண்டனையாக 50,000 - 100,000 பேசோக்கள் (பிலிப்பின்ஸ் நாணயம்) அபராதம் விதிக்கப்படலாம். (அமெரிக்க டாலரில் 2,800 - 5,590)
தற்போது உள்ள குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அபராதத்தை விட (5,000-20,000 பேசோக்கள்), புதிய அபராதம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
விதிகளை மீறுபவர்களின் பெயர் நாளிதழ்களில் வெளியிடப்பட்டு அவமானப்படுத்தப்படுவதற்கு முன்பாக, அவர்களுக்கு ஓர் எச்சரிக்கையும் விடுக்கப்படும்.
''தேசிய கீதத்தை லஅவமதிக்கும், கேலிக்குரியதாக்கும் எந்தச் செயலும் தண்டைக்குரியது'' என மசோதா கூறுகிறது.
பாடலின் முதல் வரியான லுபங் ஹினிராங் என்பது தொடங்கும்போது , அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செய்ய வேண்டும், ஒவ்வொரு மாணவரும் தேசிய கீதத்தின் வார்த்தைகளை மனப்பாடமாக செய்வதை பள்ளிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்பட இந்த மசோதா பரவலான நிபந்தனைகளை விதித்துள்ளது
நாடாளுமன்றத்தின் மற்றொரு அவையான, செனட்டின் ஒப்புதலுக்காக மசோதா தற்போது அனுப்பப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இந்த மசோதாவின் முந்தைய பதிப்பின் போது கருத்துத் தெரிவித்த அம்மசோதாவை எழுதியவர்களில் ஒருவரான மாக்சிமோ ரோட்ரிக்ஸ் ஜூனியர், தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல் பெரும்பாலும் திரையரங்குகளில் நிகழ்கிறது, அங்கு வாடிக்கையாளர்கள் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்பதில்லை எனக் கூறியிருந்தார்.
''தேசிய கீதம், அபிலாஷை,, கனவு, லட்சியம், அர்ப்பணிப்பு , உறுதிப்பாடு, தேசியவாதம் , தேசபக்தி, மக்களின் உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது" என்று அவர் கூறினார்.
- தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும்: வடகொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- ஹாங்காங்: “சீன இறையாண்மைக்கு சவால் விடக்கூடாது”
திருத்தப்பட்ட கொடி,ஹெரால்டிக் குறியீடு, என்று அறியப்படும் இதே மசோதா, தேசிய கொடி மற்றும் பிற சின்னங்களைக் காட்சிப்படுத்துதல் குறித்த விதிகள் எனப் பலவற்றை உள்ளடக்குகிறது.
நிமிடத்திற்கு 100 மற்றும் 120 துடிப்புகளுக்கு இடையில் நேரம் தக்க வைக்க வேண்டும், தேசிய கீதத்தினை முறையாகபி பாடாததை குற்றச்செயலாகக் கருவது என 2010 வரைவுக் திட்டத்திலிருந்து பல முன்மொழிவுகளை இது உள்ளடக்கியுள்ளது.