பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட மாங்கட் சூறாவளி.. 40 பேர் மரணம், 5 லட்சம் பேர் வெளியேற்றம்!
பிலிப்பைன்ஸில் வீசி வரும் மாங்கட் சூறாவளி காரணமாக இதுவரை 40 பேர் மரணம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
மணிலா: பிலிப்பைன்ஸில் வீசி வரும் மாங்கட் சூறாவளி காரணமாக இதுவரை 40 பேர் மரணம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுக்க இந்த மாதம் இயற்கை சீற்றங்கள் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. சில வாரம் முன் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது. அதன்பின் வடமாநிலங்களில் கனமழை பெய்தது.
அமெரிக்காவிலும் ஃபுளோரன்ஸ் புயல் வீசி வருகிறது. இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் வீசி வரும் மாங்கட் சூறாவளி அந்த தீவையே மொத்தமாக புரட்டி போட்டுள்ளது.
எங்கு எப்போது
கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆரம்பித்த இந்த சூறாவளி சுமார் 28 மணி நேரம் நீடித்தது. இப்போதுதான் இது கொஞ்சம் வேகம் குறைந்துள்ளது. ஆனால் இன்னும் இது முழுமையாக கரையை கடக்கவில்லை. அங்கு இப்போதும் 300+ கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது.
வெளியேறினார்கள்
இந்த சூறாவளி குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டுவிட்டது. இதனால், அங்கு சூறாவளி தாக்கும் என்று கருதப்பட்ட நகரங்களில் இருந்து 5 லட்சம் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதேபோல் 3 லட்சம் பேர் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பாதிப்பு என்ன
இந்த சூறாவளி காரணமாக 20 ஆயிரத்திற்கு அதிகமான வீடுகள் நாசமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் சூறாவளியின் பாதிப்பு முடியாததால் உண்மையான சேதத்தை கணக்கிட சில நாட்கள் ஆகும். இதனால் இதுவரை 40 பேர் மரணம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
சீனா எச்சரிக்கை
இந்த சூறாவளி தற்போது 350 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதாக கூறப்படுகிறது. இது பிலிப்பைன்ஸுடன் நிற்க போவதில்லை. இது தற்போது சீனாவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சீனாவிற்கும், ஹாங்காங்கிற்கும் இதனால் சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.