மும்பை - கராச்சி விமானச் சேவை வரும் 11-ம் தேதி முதல் திடீர் நிறுத்தம்
இஸ்லாமாபாத்: மும்பை - கராச்சி இடையிலான விமானச் சேவையை வரும் 11-ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்பட உள்ளதாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு வாராந்திர சிறப்பு விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானின் சர்வதேச விமான நிறுவனம் இந்த சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் வரும் 11ம் தேதி முதல் இந்த விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வெளிப்படையான காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 11-ம் தேதிக்கு பிந்தைய பயணத்துக்காக கராச்சி-மும்பை இடையிலான விமானங்களுக்கான முன்பதிவு டிக்கெட் விற்பனை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் எல்லை பகுதியில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த திடீர் அறிவிப்பு வெளியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.