பூமியை நோக்கி வரும் ரஷ்ய விண்கலம் நாளை வளிமண்டலத்துக்குள் நுழைந்து சிதறும்: விஞ்ஞானிகள்
மாஸ்கோ: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை ஏற்றி சென்று கட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் ஆளில்லா விண்கலம், வரும் 8ம் தேதி ( நாளை), வளிமண்டலத்திற்குள் நுழைகையில் எரிந்து சாம்பலாகும் என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் இருந்து 420 கி.மீட்டர் உயரத்தில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து இந்த ஆய்வகத்தை உருவாக்குகின்றனர். இதற்காக 6 பேர் கொண்ட குழு இயங்கி வருகிறது.
அவர்களுக்காக நீர், ஆக்ஸிஜன் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை ஆளில்லா விண்கலங்கள் மூலம் அனுப்பப் பட்டு வருகின்றன.
அந்தவகையில் கடந்த வாரம் கஜகஸ்தானில் இருந்து விண்வெளி வீரர்களுக்குத் தேவையான பொருட்களோடு ‘எம்.27 எம்' என்ற ஆளில்லா விண்கலம் ஒன்று விண்ணில் ஏவப்பட்டது.
ஆனால் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்த விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதனால், பூமியுடனான தொடர்பை அந்த விண்கலம் இழந்தது. எனவே, மீண்டும் அது பூமியை நோக்கி விழுந்து கொண்டிருப்பதாகவும், எந்நேரத்திலும் அந்த விண்கலம் பூமியைத் தாக்கலாம் என்றும் தகவல் பரவியது. ஆனால், இவ்வாறு கட்டுப்பாட்டை இழக்கும் விண்கலங்கள் வானிலேயே வெடித்துச் சிதறும், எனவே அச்சப்படத் தேவையில்லை என விஞ்ஞானிகள் விளக்கமளித்தனர்.
இந்நிலையில், இந்த விண்கலம் நாளை ரஷ்ய நேரப்படி அதிகாலை 1.23 மணி முதல் இரவு 9.55 மணிக்குள் வளிமணடலத்திற்குள் நுழைகையில் வெடித்துச் சிதறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அவ்வாறு வெடித்துச் சிதறும் போது அதிலிருந்து ஏதேனும் சில பொருட்கள் மட்டும் பூமியை வந்தடையும் என்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அவை, கிழக்கு அமெரிக்கா, கொலம்பியா, பிரேசில் அல்லது இந்தோனேசியா கடலில் விழும் என்றும், பூமியில் நிலப்பரப்பில் விழாது என்றும் அவர்கள் உறுதிபட கூறியுள்ளனர்.
இதற்கிடையே இந்த விண்கலம் செயல்பாடு இழந்தது குறித்து சிறப்பு கமிஷன் விசாரணைக்கு ரஷியா உத்தரவிட்டுள்ளது. தற்போது விண்கலம் எரிந்ததின் மூலம் ரூ.330 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வரும் ஜூன் 19ம் தேதி விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களுடன் மீண்டும் ஒரு புதிய விண்கலத்தை அமெரிக்காவில் இருந்து அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டும் இதே போன்று ஒரு விண்கலம் எரிந்தது. அதை தொடர்ந்து அது சைபீரியாவில் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.