ரத்தம்... பலி... வன்முறை தாக்குதல்களுக்கு இடையில் பெத்தலகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
ஜெருசலேம்: தீவிரவாத தாக்குதல்களுக்கும், கடும் வன்முறை வெறியாட்டங்களுக்கும் இடையே இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்தலகேமில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
உலக அளவில் சுமார் 220 கோடி மக்கள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றிவரும் நிலையில் மத்திய கிழக்கில் உள்ள சில நாடுகள் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு இந்த ஆண்டு தடை விதித்துள்ளன.
இந்நிலையில், இயேசு கிறிஸ்து பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையில் பங்கேற்க உலகின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
நள்ளிரவு சிறப்பு ஆராதனை:
பெத்தலகேம் நகரின் மங்கர் சதுக்கத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு ஆராதனையை தலைமை அருட்தந்தை பொவாட் தவால் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
பலியான மக்களுக்கு அர்ப்பணம்:
சமீபகாலமாக, இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல்களும் அது சார்ந்த உயிரிழப்புகளும் அதிகரித்துவரும் நிலையில் இந்த சிறப்பு ஆராதனையை வன்முறைக்கு பலியான மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பொவாட் தவால் அறிவித்தார்.
மூன்று பேர் உயிரிழப்பு:
இதற்கிடையே கிறிஸ்துமஸ் தினமான நேற்று மேற்கு கரை பகுதியில் நடைபெற்ற வன்முறை தாக்குதலில் மூன்று பேர் பலியாகினர். இங்குள்ள அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தவந்த ஒருவரை இஸ்ரேல் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஐந்து நிமிடம் அணைப்பு:
முன்னதாக, வன்முறை மற்றும் தீவிரவாதத்துக்கு பலியான உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து தேவாலயங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரங்களில் ஒளிரும் மின்விளக்குகளை ஐந்து நிமிடங்களுக்கு அணைத்து வைக்கும்படி பொவாட் தவால் உத்தரவிட்டிருந்தார்.
மீண்டும் ஒளிர்ந்த கிறிஸ்துமஸ் மரம்:
அதன்படி, மங்கர் சதுக்கத்தில் இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்த மின்விளக்குகளும் நேற்றிரவு ஏழு மணிக்கு அணைக்கப்பட்டு, ஐந்து நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒளிரத் தொடங்கின.