கடலில் மீண்டும் 2 முறை கருப்புப் பெட்டி சிக்னலை கண்டறிந்த ஆஸ்திரேலிய கப்பல்
பெர்த்: மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் ஒன்று கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை மீண்டும் கண்டறிந்துள்ளது.
தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய கடற்படை கப்பலான ஓஷன் ஷீல்டில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டுபிடிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்தி கருவியை அமெரிக்க கடற்படை அளித்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கப்பல் விமானத்தை தேடுகையில் நேற்று மாலை மற்றும் இரவு ஆகிய 2 வேளைகளில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிந்துள்ளது. இதன் மூலம் விமானத்தை கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
ஒலி வந்த இடத்தில் இன்று 11 ராணுவ விமானங்கள், 4 பயணிகள் விமானங்கள் மற்றும் 14 கப்பல்கள் மலேசிய விமானத்தை தேடி வருகின்றன.
முன்னதாக சீன கப்பலும், ஆஸ்திரேலிய கப்பலும் கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கண்டறிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.