பிலிப்பைன்ஸில் எலும்புக்கூடுகளுடன் கிடந்த விமான பாகம்: மாயமான மலேசிய விமானத்தினுடையதா?
மணிலா: பிலிப்பைன்ஸில் பல எலும்புக்கூடுகளுடன் கிடந்த விமானத்தின் பகுதி மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. ஆனால் விமானத்தின் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள லா ரீயூனியன் தீவில் கிடைத்த விமானத்தின் வால் பகுதி மாயமான விமானத்தினுடையது என்று கூறப்பட்டது. இந்நிலையில் பிலிப்பைன்ஸில் உள்ள சுக்பாய் தீவில் இருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதியில் பல எலும்புகளுடன் கூடிய விமானத்தின் பாகம் கிடைத்துள்ளது.
ஜமில் உமர் என்பவர் மலேசிய போலீசாருக்கு போன் செய்து தனது உறவினர் சித்தி கயாம் மற்றும் பிறர் பறவைகளை வேட்டையாடச் சென்றபோது விமானத்தின் பாகம் ஒன்று கிடந்ததாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
அந்த பாகத்தின் மீது சித்தி ஏறிப் பார்த்தபோது அதில் பல எலும்புக்கூடுகள் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன் அருகே 70 இன்ச் நீளமும், 35 இன்ச் அகலமும் கொண்ட மலேசிய கொடி ஒன்றும் கிடந்துள்ளது என்றார்.
இது குறித்து உண்மையை கண்டறிய உதவுமாறு மலேசிய போலீசார் பிலிப்பைன்ஸ் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளனர்.