இவ்வளவு மோசமாவா இருப்பீங்க.. பேஸ்புக்கை விட்டு ஓடியது பிளேபாய்!
பயன்பாட்டாளர்களின் தகவல்களை முகநூல் கசியவிட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து பிரபல இதழான ப்ளேபாய் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தை நீக்கியுள்ளது.
வாஷிங்டன் : முகநூல் தகவல் திருட்டு அம்பலமாகி வரும் நிலையில் பிரபலங்கள் தங்களது முகநூல் பக்கங்களை நீக்கி வருகின்றனர். எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்ன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தை நீக்கிய நிலையில் பிரபல இதழான ப்ளேபாய் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தை நீக்கியுள்ளது.
ப்ளேபாய் இதழின் முதன்மை கிரியேட்டிவ் அதிகாரியும், இதழின் நிறுவனரின் மகனுமான கூப்பர் ஹெப்னர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், பேஸ்புக் பக்கத்தின் விதிகள் மற்றும் கார்ப்பரேட் கொள்கைகள் ப்ளேபாய் இதழின் மதிப்பிற்கு நேர் எதிராக உள்ளன. முகநூலில் பாலியல் தொடர்பான கருத்துகள் பதிவிட சில அடக்குமுறைகள் உள்ளன, தற்போது 2016 அமெரிக்க தேர்தலின் போது 50 மில்லியன் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை பேஸ்புக் வேவு பார்த்து சேகரித்துள்ளது அம்பலமாகியுள்ளது.
பல்வேறு முகநூல் பக்கங்கள் மூலம் ப்ளேபாய் இதழுக்கு 25 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர. அவர்கள் பற்றி விவரங்களை பேஸ்புக் சேகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை. எனவே தான் நாங்கள் பேஸ்புக் தளத்தில் இருந்து விலகுகிறோம் ப்ளேபாய் என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ப்ளேபாய் கணக்குகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன. ப்ளேபாய் எப்போதுமே தனி மனித சுதந்திரத்திற்கு துணை நிற்கும், பாலுறவை கொண்டாடும் என்றும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளேபாயின் முக்கிய முகநூல் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிறுவனத்தில் பிலிபைன்ஸ் மற்றும் ஜெர்மனி பக்கங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பக்கம் இன்ஸ்டாகிராமிலும் உள்ளது, இன்ஸ்டாகிராமும் முகநூலால் நிர்வகிக்கப்படுவது தான்.
ப்ளேபாய் இதழ் முகநூலில் இருந்து வெளியேறியுள்ளது வாட்ஸ் அப்பின் இணை நிறுவனர் பிரெய்ன் ஆக்டனின் பேஸ்புக் பக்கத்தை நீக்கு பிரச்சாரத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. தகவல் பராமரிப்பில் குளறுபடி ஏற்பட்டதால் பேஸ்புக் பல சறுக்கல்களை சந்தித்து வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே எவ்வளவு வேகமாக பேஸ்புக் பரவியதோ அதே அளவிற்கு மக்களின் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளது. ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் கூக் முகநூலின் கொள்கைகளை விமர்சித்துள்ளார். இதனை முன்கூட்டியே அவர்கள் சரி செய்திருக்க வேண்டும், இப்போது மிகவும் காலம் கடந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.