இளவரசர் சார்லஸ் தம்பதியை படுகொலை செய்ய சதி- வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல்!!
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலாவை படுகொலை செய்வதற்கு தீட்டப்பட்ட சதித் திட்டத்தை அயர்லாந்து போலீசார் முறியடித்துள்ளனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், மனைவி கமீலா ஆகியோர் வரும் 19-ந் தேதி அயர்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதையொட்டி அயர்லாந்து போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சார்லஸ் தம்பதியினர் பார்வையிட இருந்த பகுதிகளில் அங்குலம் அங்குலமாக சோதனையிடப்பட்டது. அப்போது துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் சுற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து அயர்லாந்து போலீசார் விசாரித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சார்லஸ் தம்பதியினரை கொல்ல சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த சதித் திட்டத்தில் தொடர்புடைய மேலும் 6 பேரையும் அயர்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
அதாவது இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த மவுண்ட்பேட்டன் 1979ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இளவரசர் சார்லஸ் அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தார். அந்த இடத்துக்கே இருகேதான் சார்லஸை கொல்லவும் சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சார்லஸ் தம்பதியினர் வருகையின் போது எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.