சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் பிரதமர் மோடி
பீஜிங்: சீனாவில் நடைபெற்றுவரும் ஜி-20 எனப்படும் வளர்ந்த நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, ஹங்ஜூ மாகாணத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில், சீன அதிபர் ஷி ஜிங்பிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவு மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
அப்போது சீன அதிபர், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தவும், ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக கூறினார்.
பிரதமர் மோடி கூறுகையில், இந்தியாவும் சீனாவும், ஒருவருக்கொருவர் தங்களது லட்சியம், கவலைகள் மற்றும் பிராந்திய நலன்களை ஒருவருக்கொருவர் மதிக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை அரசியல் ரீதியாக யாரும் கருதக்கூடாது என்றார்.
கடந்த மூன்று மாதங்களில் சீன அதிபரை மோடி இரண்டாவது முறையாக சந்திக்க உள்ளார். முன்னதாக தாஷ்கண்டில் ஜூன் மாதத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இருவரும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.