இன்ஸ்டாகிராமில் இணைந்த மோடி: 10 நிமிடத்தில் 35000 ஃபாலோயர்கள்
மியான்மர்: புகைப்படங்களை பகிர உதவும் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பிரதமர் நரேந்திர மோடி தன்னை இணைத்துக்கொண்டார். அவர் இணைந்த பத்தே நிமிடத்தில் 35000 பேர் அவரை பின்தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.
தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை சந்திப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தை நேற்று(செவ்வாய்க்கிழமை) துவங்கினார்.
இந்த நிலையில் 25-வது ஆசிய உச்சி மாநாட்டின் மாபெரும் விளம்பரப்பலகையை தனது செல்போன் வழியாக புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார் பிரதமர் மோடி.
தற்போது மியான்மர் நாட்டில் இருக்கும் நரேந்திர மோடி அங்கிருந்து தனது செல்போனில் அவரே எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரதமர் மோடியின் முதல் புகைப்பட பகிர்வு இதுவாகும்.
தான் இன்ஸ்டாகிராமில் இணைந்ததை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி புகைப்படத்தை பகிர்ந்து அடுத்த 13 நிமிடங்களில் அவரது பகிர்வை 35,000 பேர் தொடர ஆரம்பித்தனர். அவரது படத்துக்கு மட்டும் 2,537 விருப்பங்கள் வந்துள்ளன.
ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு சுமார் 80 லட்சம் ஆதரவாளர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.