ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு.. நாளைய முத்தரப்பு மீட்டிங்கில் ட்ரம்பும் சேர்ந்துகொள்வார்!
டோக்கியோ: ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறும், ஜி 20 உச்சிமாநாட்டிற்கு, முன்னதாக பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசினார். அப்போது மும்பை-அகமதாபாத் நடுவேயான புல்லட் ரயில் திட்டம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, பொதுத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராக பதவியேற்றதற்காக, மோடியை, அபே வாழ்த்தினார். விரைவில் இந்தியாவுக்கு வருவதாகவும், உறுதியளித்தார்.
ஜி 20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடந்த, இந்தியா-ஜப்பான் சந்திப்பு பலனளிப்பதாக இருந்ததாகவும், இரு நாட்டு பிரதமர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் பிரச்சினையில் முந்தைய ஜி 20 கூட்டங்களில் பிரதமர் மோடியின் முன்முயற்சியை பிரதமர் அபே குறிப்பிட்டு பாராட்டினார். மேலும் ஜி 20 நாடுகள், அதன் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த பிரச்சினையை சமாளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
A friendship characterised by warmth and the promise of a bright future.
— PMO India (@PMOIndia) June 27, 2019
Prime Ministers @narendramodi and @AbeShinzo hold talks in Osaka, the first such meeting between these leaders since the start of Japan’s Reiwa era.
Many aspects of India-Japan relations were discussed. pic.twitter.com/59CiuBHZWA
மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் மற்றும் வாரணாசியில் உள்ள மாநாட்டு மையம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இது தொடர்பாக இரு தலைவர்களும் இந்த திட்டங்களில் நடைபெற்றுள்ள முன்னேற்றம் குறித்து அப்போது சுறுக்கமாக ஆய்வு செய்தனர்.
ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நாளைய முத்தரப்பு சந்திப்பின்போது, இவ்விரு பிரதமர்களும் மீண்டும் சந்திப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.