சுவிஸில் மோடி.... கருப்பு பணம் மீட்பு குறித்து முக்கிய ஆலோசனை
ஜெனீவா: சுவிட்சர்லாந்து பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோகன்சினைடருடன் கருப்பு பணம் மீட்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் நரேந்திரமோடி 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கத்தார் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார்.
ஜெனீவா சென்றடைந்த பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து அதிபர் ஜோகன்சினைடரை சந்தித்து பேசினார். அப்போது சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பது குறித்தும், அவற்றை மீட்பது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
மேலும் சுவிஸ் தொழில் அதிபர்களையும் சந்திக்கும் பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்ய வருமாறும் அழைப்பு விடுக்கிறார். சுவிஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை அவர் அமெரிக்கா புறப்படுகிறார்.
அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அதிபர் ஒபாமாவை நேரில் சந்திக்கிறார். அப்போது பருவநிலை மாற்றம் இரு நாட்டு பாதுகாப்பு, தூதரக ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் அமெரிக்கா நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.