காபூலில் மோடிக்கு உற்சாக வரவேற்பு! வாஜ்பாய் பெயரிலான புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறந்து வைப்பு!!
காபூல்: பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியா கட்டி கொடுத்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரிலான நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். இந்தியா- ரஷ்யா இடையேயான 16வது வருடாந்திர மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்யா அதிபர் புதின் பங்கேற்றனர்.
இந்த பயணத்தின் போது பல்வேறு துறை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கமோவ் - 226 ரக ஹெலிகாப்டர்களை இரு நாடுகளும் கூட்டாக இந்தியாவில் தயாரிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இருநாட்டுத் தலைவர்களும் வெளியிட்டிருந்த கூட்டறிக்கையில், சர்வதேச நாடுகள் பயங்கரவாத விவகாரத்தில் போடும் இரட்டை வேடத்துக்கு எதிராக இணைந்து இருநாடுகளும் போராடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மோடி தமது 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
காபூலில் இந்தியா கட்டிக் கொடுத்திருக்கும் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த கட்டிடத்துக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த கடிட்டத்தைத் திறந்து வைத்த பேசிய பிரதமர் மோடி, வாஜ்பாய் பிறந்த நாளில் அவர் பெயரிலான கட்டிடத்தைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்; இந்தியா- ஆப்கான் உறவின் நட்பின் அடையாளமாக வாஜ்பாய் பெயரிலான கட்டிடம் திகழும். அமைதியை விரும்பும் நாம் அனைவரும் இணைந்து பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்றார்.