ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்... அயர்லாந்திடம் ஆதரவு கோரினார் மோடி
டூப்ளின் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடமளிக்க ஆதரவளிக்குமாறு அயர்லாந்திடம் பிரதமர் மோடி ஆதரவு கோரியுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி அயர்லாந்து மற்றும் அமெரிக்காவில் 7 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். அதற்காக நேற்று (செவ்வாய்) மாலை டெல்லியில் இருந்து அயர்லாந்துக்கு புறப்பட்டு சென்றார்.
இதன்மூலம் 60 ஆண்டுகளுக்கு பிறகு அயர்லாந்து சென்ற இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். தலைநகர் டூப்ளின் சென்ற அவருக்கு விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் லியோ வரத்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அயர்லாந்து பிரதமர் என்டா கென்னியை மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது...
ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பயங்கரவாதம், தீவிரவாதம் உட்பட சர்வதேச சவால்களை சமாளிப்பது பற்றி பேச்சு நடத்தினோம். ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் பதவி பெறுவதற்கு அயர்லாந்து ஆதரவு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா நிரந்தர உறுப்பினரானால் இருதரப்பு உறவும் ஆழமாவதுடன், சர்வதேச பிரச்சனைகள் மற்றும் ஆயுத பரவலை கட்டுப்படுத்த வகை செய்யும்.
இதேபோல் உலகளாவிய அணு ஆயுத குறைப்பில் இந்தியாவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அயர்லாந்தின் விசா நடைமுறைகளில் மாற்றம் தேவை"இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.