தீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்
ஹூஸ்டன்: தீவிரவாதத்திற்கும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கும் எதிராக ஒரு தீர்க்கமான போருக்கான நேரம் வந்துவிட்டது என பிரதமர் மோடி கடுமையாக எச்சசரித்து பேசினார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த பிரதமர் மோடி. 'ஹவுடி மோடி' (மோடி நலமா) நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
பிரதமர் மோடி இந்திய மொழிகளின் தன்மை. இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாச்சாரம், அதிகாரமளித்தல் குறித்து பெருமிதத்துடன் பேசியதுடன், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான நட்பு உறவு குறித்தும் விரிவாக பேசினார். தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையாக எச்சரித்தும் மோடி பேசினார்.
சாமானியருக்கு அதிகாரம்
பிரதமர் மோடி ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பேசுகையில் "எங்களைப் பொறுத்தவரை, 'வணிகத்தை எளிதாக்குவது' போலவே 'வாழ்க்கையை எளிமையாக்குவது முக்கியம். ஆனால் அதற்கு சாதாரண மக்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியது முக்கியம்: சாதாரண மக்கள் அதிகாரம் பெறும்போது தான் சமுகம் மற்றும் பொருளாதார வளர்சசியின் பாதையில் தேசம் முன்னேறுகிறது"
காந்தியின் 150வது பிறந்த நாள்
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை கொண்டாடும் போது இந்தியா திறந்த வெளி மலம் கழித்தல் பிரச்சனையில் இருந்து விடைபெறும். கடந்த 5 ஆண்டுகளில் 1500 பழமையான சட்டங்களில் இருந்து விடைபெற்றுள்ளோம் என்றார்.
370 பிரிவு ரத்து ஏன்
ஜம்மு காஷ்மீர் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் வளர்ச்சிக்காகவே பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. தீவிரவாதிகளும். பிரிவினைவாதிகளும் சிறப்பு அந்தஸ்த்தை தவறாக பயன்படுத்தினார்கள் அது தற்போது தடுக்கப்பட்டுள்ளது. இப்போது அங்குள்ள மக்களுக்கு சம உரிமை கிடைத்துள்ளது" என்றார்.
தீவிரவாதத்தை பாதுகாப்பவர்கள்
சிலருக்கு அரசியல் சாசன பிரிவு 370தை ரத்து செய்தது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் தங்கள் நாட்டை முறையாக நிர்வகிக்க தெரியாதவர்கள். இவர்கள்தான் தீவிரவாதத்தை பாதுகாத்து வளர்க்கிறார்கள். முழு உலகமும் அவர்களை நன்கு அறிவார்கள்.
பிரதமர் மோடி எச்சரிக்கை
அமெரிக்காவில் 9/11 அல்லது மும்பையில் 26/11 ஆக இருந்தாலும், சதிகாரர்கள் எங்கே இருக்கிறார்கள்? (கேள்வி எழுப்பியதுடன்) தீவிரவாதத்திற்கும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கும் எதிராக ஒரு தீர்க்கமான போருக்கான நேரம் வந்துவிட்டது. இந்த சண்டையில், அதிபர் டிரம்ப் உறுதியாக நிற்கிறார் என்பதை நான் இங்கு கூற விரும்புகிறேன்.
ஒப்பந்தம் செய்யும் கலை
அதிபர் டிரம்ப் என்னை கடுமையான பேச்சுவார்த்தைக்காரர் என்று அழைக்கிறார். ஆனால் டிரம்ப் 'ஒப்பந்தம் செய்யும் கலை'யில் ஒரு மாஸ்டர், நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன். அதிபர் டிரம்ப் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இந்தியா வர வேண்டும் என்று விரும்புகிறேன். எங்கள் நட்பு நம் கனவுகளையும், எதிர்காலத்தையும் புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும்" இவ்வாறு கூறினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடந்த அரங்கில் பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் ஒன்றாக கைகோர்த்து நடந்து சென்றனர்.