ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாக். பிரதமர் இம்ரான்கானிடம் பிரதமர் மோடி பேச வாய்ப்பில்லை!
பிஷ்கேக்: கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, வரும் 13-ந் தேதி தொடங்குகிறது.
இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளார்.
சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை உறுதி செய்துள்ளார். இதேபோல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் பிரதமர் மோடி மாநாட்டின் போது சந்தித்து பேசவுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் எதிரொலியால் கடும் சரிவில் இலங்கை சுற்றுலா துறை... மீட்டெடுக்க பெரும் முயற்சி!
இதனை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான ரவீஷ்குமாரும் உறுதி செய்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எந்த திட்டமும் இதுவரை வகுக்கப்படவில்லை என்றும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறியுள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டுதான் இணைக்கப்பட்டன. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்களின் பிரச்சனைகள் இந்த அமைப்பின் பன்முகத் தன்மைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என உறுதியளித்தப்பின்னரே இணைக்கப்பட்டன.
இந்நிலையில் பிஷ்கேக்கில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்காக அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்றபோது திறந்துவிடப்பட்டது. பாலகோட் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கான வான் வழிப்பாதையை மூடியது பாகிஸ்தான்.
தற்போது பிரதமர் மோடியின் விமானம் ஜூன் 13ஆம் தேதி இஸ்லாமாபாத் வழியாக செல்ல அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் விமானம் செல்ல பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கான வான்வழிப்பாதையை பாகிஸ்தான் மூடியுள்ளதால் இந்தியர்கள் பலரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசுவார் என கூறப்படுகிறது. ஆனால் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இதனை உறுதிபடுத்தவில்லை.