இந்தியா மீதான உலகத்தின் பார்வை கடந்த சில மாதங்களில் மாறியுள்ளது- மோடி!
மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய நாடுகளுக்கு 10 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்று உள்ளார். முதல் கட்டமாக, இந்தியா-ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக மியான்மருக்கு சென்றார். அங்குள்ள நே பி தா நகரில் இம்மாநாடுகள் நடைபெற்றன. அப்போது பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, நே பி தாவில் அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த விருந்தில் மியான்மரில் வாழும் இந்திய வம்சாவளியினர் பலரும் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்தியில் மோடி பேசியதாவது:-
இந்தியா மீதான பார்வை...
சமீபத்திய சாதனைகளால் இந்தியா மீதான உலகத்தின் பார்வை கடந்த சில மாதங்களில் மாறியுள்ளது. மியான்மரில் வாழும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நீங்கள் இதற்காக பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
உலக நாடுகளின் நட்பு...
இதனால், உலக அரங்கில் இந்தியாவிற்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவுடன் நட்புறவைப் பேணிக் காக்க விரும்புகின்றன.
பெருமைத் தேடித் தர வேண்டும்...
மியான்மரில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீங்களும், இந்தியாவிற்கும், மியான்மருக்கும் பெருமைத் தேடித் தரக் கூடிய வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
கலாச்சாரத் தொடர்பு...
மேலும், மியான்மருக்கும், இந்தியாவிற்கும் பழமையான கலாச்சாரத் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்க் செயற்கைக் கோள்...
தனது அண்டை நாடுகளின் நலனில் அக்கறைக் கொள்ள வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது. சார்க் நாடுகளுக்காக இந்தியா சார்பில் அனுப்பப் பட உள்ள செயற்கைக் கோளின் பயன்கள் மியான்மருக்கும் கிடைக்கும்.
போலியோ ஒழிப்பு...
அதேபோல், தெற்கு ஆசிய நாடுகள் மற்றும் மியான்மரில் போலியோ நோயை ஒழிக்க இந்தியா பாடுபடும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேட் இன் இந்தியா...
மேலும், மோடி அரசு இந்தியாவில் அறிமுகப் படுத்தியுள்ள ‘மேட் இன் இந்தியா' திட்டத்தைப் பற்றியும் அவர் தனது பேச்சினூடே குறிப்பிட்டார்.
நினைவுப் பரிசு...
இந்த விருந்தில் மணிப்பூர் மோரே தமிழ்ச் சங்கத் தலைவர் சேகரும் கலந்து கொண்டு பிரதமருக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.